கல்லூரி படிப்பை தொடரமுடியாததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் தரண்யா (வயது 18). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி திறந்ததையொட்டி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது தனது தாய் விஜயாவிடம் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் முருகேசனும், விஜயாவும் நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம். கல்லூரிக்கு பணம் கட்ட வசதி இல்லை என்று கூறி கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த தரண்யா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது தாய் விஜயாவும், அதிர்ச்சியில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கதினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி தரண்யா நேற்று இறந்தார். விஜயா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.