செய்திகள்

கடையநல்லூரில் நகை பணத்துடன் மாணவி கடத்தல்: 6 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-06-16 11:35 GMT   |   Update On 2018-06-16 11:35 GMT
வீட்டில் தனியாக இருந்த மாணவியை கும்பல் கடத்தி சென்று உள்ளது. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் செவல்விளை தேவர் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் மஞ்சு (வயது 17) .பிளஸ்-2 முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மஞ்சுவின் பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். மஞ்சு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன், மூர்த்தி, சிவா, சரவணன், கணேஷ், முத்துராஜ், யோகேஷ் ஆகிய 6 பேர் அங்கு வந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவை அவர்கள் காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது மஞ்சு வீட்டில் இருந்த ரூ.12லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.63ஆயிரம் ஆகியவற்றையும் கொண்டு சென்றுவிட்டனர். இது பற்றி மஞ்சுவின் தந்தை மாரியப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கடத்திய கும்பல் காதல் விவகாரத்தில் கடத்தி சென்றார்களா? அல்லது நகை-பணத்தை அபேஸ் செய்யும் நோக்கில் கடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக முருகேசன் உள்ளிட்ட 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடையநல்லூர் பகுதியில் சமீபகாலமாக மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

Tags:    

Similar News