செய்திகள்

வளவனூரில் பரபரப்பு - போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்த நல்லபாம்பு

Published On 2018-06-12 10:07 GMT   |   Update On 2018-06-12 10:07 GMT
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இன்று காலை அங்குள்ள ஒரு வீட்டில் நல்லபாம்பு திடீரென்று புகுந்தது. வீட்டில் உஷ்... உஷ்.... என சத்தம் வருவதை கேட்டு அங்கிருந்தவர்கள் என்ன சத்தம்? என்று தேடினர்.

அப்போது அங்கு ஒரு நல்லபாம்பு இருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து, பாம்பு... பாம்பு.... என கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

அதற்குள் அந்த பாம்பு மீட்டர் பெட்டிக்குள் புகுந்து விட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜெய்கணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மீட்டர் பெட்டிக்குள் புகுந்த நல்ல பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். அதன் பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

பாம்பு பிடிபட்டதால் குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Tags:    

Similar News