செய்திகள்

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் கணவருடன் பட்டதாரி இளம்பெண் தஞ்சம்

Published On 2018-06-11 10:52 GMT   |   Update On 2018-06-11 10:52 GMT
பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் பட்டதாரி இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அன்னை ஆரோக்கியராஜ் (வயது 25). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் மதுக்கூர் அருகே உள்ள மண்டலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரியா (22) என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்னை ஆரோக்கிய ராஜிம், பிரியாவும் உறவினர்கள். பிரியா பி.எஸ்சி படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, தனது பெற்றோரிடம் தான் அன்னை ஆரோக்கியராஜை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதை கேட்டு திடுக்கிட்ட அவரது பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாங்கள் பார்த்தும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று உறவினர்கள் பிரியாவை மிரட்டி வந்ததாத கூறப்படுகிறது.

இதுபற்றி சிங்கப்பூரில் உள்ள காதலன் அன்னை ஆரோக்கியராஜிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சிங்கப்பூரில் இருந்து கடந்த 4-ந் தேதி இந்தியா திரும்பினார்.

பின்னர் ஊருக்கு வந்த அன்னை ஆரோக்கியராஜ், தனது உறவினர்களுடன் பிரியா வீட்டுக்கு சென்று முறைப்படி திருமணம் செய்து வைக்க பெண் கேட்டார். அப்போது பிரியாவின் உறவினர்கள் மறுத்து தெரிவித்து அனுப்பி விட்டனர்.

பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிரியா கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் காதலன் அன்னை ஆரோக்கியராஜை சந்தித்தார். பிறகு இருவரும் வேளாங்கண்ணி சென்றனர். அங்கு நண்பர்கள் முன்னிலையில் பிரியா கழுத்தில் அன்னை ஆரோக்கியராஜ் தாலி கட்டினார்.

இதற்கிடையே திருமணம் நடந்து விட்டதால் பிரியாவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு இன்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிரியாவின் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தஞ்சை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News