செய்திகள்

வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

Published On 2018-06-10 23:13 IST   |   Update On 2018-06-10 23:13:00 IST
வேடசந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள குருவனூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் திருமலைசாமி. மில் தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு விக்னேஷ்வரி (வயது 12), காளஸ்வரி (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விக்னேஷ்வரி 7-ம் வகுப்பும், காளஸ்வரி 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காளஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவளை, பெற்றோர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அவள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

பின்னர் அவள், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுமி பரிதாபமாக இறந்தாள். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் குருவனூரில் முகாமிட்டு சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெருக்கள் மற்றும் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு பிளச்சிங் பவுடர் தூவப்பட்டன. கொசுமருந்தும் அடிக்கப்பட்டது. 
Tags:    

Similar News