திண்டுக்கல் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய பைனான்சியர் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது40). கிழக்கு ரத வீதியில் கண்ணாடி கடை வைத்துள்ளார். இவர் தனது குடும்ப தேவைக்காக குமரவேல் என்பவரிடம் கடனாக பணம் வாங்கி இருந்தார். அதனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது. நேற்று மாலை முத்துப்பாண்டி தனது மனைவி காளீஸ்வரியுடன் மகன் தாமோதரன் பிறந்த நாளை முன்னிட்டு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அங்கு வந்த குமரவேல் (29), அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய 2 பேரும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத உனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா? என கேட்டு சத்தம்போட்டனர். மேலும் பூக்கடையில் இருந்த கத்தியை எடுத்து அவர் தலை மற்றும் முதுகில் குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த முத்துப்பாண்டி மயங்கி விழுந்தார். அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நகர் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் முப்பிடாரி வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர். மகேந்திரனை தேடி வருகின்றனர்.