செய்திகள்

கம்பம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த வாலிபர் உடல் கொலையா? போலீசார் விசாரணை

Published On 2018-05-26 11:47 GMT   |   Update On 2018-05-26 11:47 GMT
கம்பம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்:

கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு பயன்பாடற்ற தோட்டத்து கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது உடல் மேலே கொண்டு வரப்பட்டது. அவர் இறந்து 30 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனால் உடலை மேலே எடுத்தபோதே பல பாகங்கள் தனித்தனியாக கிணற்றுக்குள் விழுந்தன. பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் வெளியூர் வியாபாரியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News