தாடிக்கொம்பு பகுதி குடகனாற்றில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு பகுதியில் ஆறு, குளம், நீரோடைகளில் மணல் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
விவசாயிகளுக்காக அரசு சார்பில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சில கும்பல் ஜே.சி.பி. மூலம் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருகிறது. இதனால் நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இப்பகுதியில் லாரிகளில் அதிகளவில் உரிமம் இல்லாமல் மணல் அள்ளிச் செல்கின்றனர். அதிகாரிகளும் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.
தாடிக்கொம்பு பகுதியில் உள்ள குடகனாற்றில் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. ஆர்.டி.ஓ. ஜீவா தலைமையில் அலுவலர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது டிராக்டரில் ஒருவர் மணலை அள்ளிக் கொண்டு வந்தார். அதிகாரிகளைக் கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.