செய்திகள்

குமாரபாளையம் அருகே டிரைவர் கொலை: 3 பேர் கைது

Published On 2018-05-20 15:57 GMT   |   Update On 2018-05-20 15:57 GMT
குமாரபாளையம் அருகே டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு பகுதியில் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் லாரி நேற்று முன்தினம் திருட்டு போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் தேடியபொழுது குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி பிரிவில் திருட்டுப்போன லாரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மற்ற டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மீட்டனர். அப்போது லாரியின் உள்ளே வீ.மேட்டூர் பகுதியினை சேர்ந்த முருகேசன் என்பவர் படுத்திருந்தார். அவரை பிடித்து லாரிகள் நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முருகேசனை மரத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள். இதில் அவர் இறந்து விட்டார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார், முருகேசன் திருடிசென்ற லாரியின் உரிமையாளர் சின்னதம்பி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.

அப்போது குமாரபாளையம் பச்சாம்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சின்னதம்பி (47) மற்றும் டிரைவர்கள் மலையம்பாளையத்தை சேர்ந்த சந்திரன் (எ) ராஜா கண்ணு (58) படைவீடு பகுதியினை சேர்ந்த சதாசிவம் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News