செய்திகள்

சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தை கொலை - மகன் வெறிச்செயல்

Published On 2018-05-19 04:27 GMT   |   Update On 2018-05-19 04:27 GMT
சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காளிப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்ன சாமி (வயது 70). டி.வி. மெக்கானிக்.

இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 33 சென்ட் நிலம் உள்ளது. அதனை பிரித்து கொடுக்குமாறு சின்னசாமியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது31) கடந்த சில ஆண்டுகளாக தந்தையிடம் வற்புறுத்தி வந்தார்.

ஆனால் சின்னசாமி நிலத்தை பிரித்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் மூச்சு திணறி சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் இளைய மகன் ரமேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு அவர் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

பின்னர் சம்பவம் குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் மனைவி குழந்தையம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

அவரது வீட்டின் அருகில் சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்திரசேகருக்கு சந்தியா (25) என்ற மனைவியும், சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
Tags:    

Similar News