செய்திகள்

கடன் தொல்லை: பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி

Published On 2018-05-14 09:59 GMT   |   Update On 2018-05-14 09:59 GMT
கடன் பிரச்சினை காரணமாக பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்கனூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் மகன்கள்-மகளை படிக்க வைப்பதில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் குடும்ப வறுமை காரணமாக லட்சுமி சென்னைக்கு சென்று வீட்டு வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வேலை பார்க்கும் இடத்தில் நன்னிலம் அருகே உள்ள அச்சுத மங்கலத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (30) என்பவரும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

அப்போது ராஜீவ்காந்தியுடன் பழக்கம் ஏற்பட்டதால் லட்சுமி அவரிடம் பணம் கடனாக பெற்றுள்ளார்.

இந்தநிலையில் ராஜீவ் காந்தி தனது மனைவி ஆனந்தியிடம் லட்சுமி பணம் வாங்கி விட்டு தராமல் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி ஆனந்தி அவரது உறவினர்களிடம் கூறியதின் பேரில் அவர்கள் லட்சுமியிடம் பணம் கேட்டு அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த லட்சுமி இன்று காலை 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள மொட்டையாறு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் லட்சுமியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News