செய்திகள்

தலைஞாயிறு அருகே கல்லூரி மாணவியிடம் செயினை பறித்த வாலிபர் கைது

Published On 2018-05-09 15:07 IST   |   Update On 2018-05-09 15:07:00 IST
தலைஞாயிறு அருகே கல்லூரி மாணவியிடம் செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைஞாயிறு:

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த கரியாப்பட்டினம் அருகே உள்ள கீழகாடுவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் மைதிலி (வயது 18). கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த மார்ச் 17-ந் தேதி கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு செல்ல கரியாப்பட்டினம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் மைதிலி அருகே வந்து ஒரு பெண்ணின் பெயரை கூறி அவரை தெரியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு மைதிலி பதில் கூறியபோது திடீரென மைதிலி கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து தப்பி விட்டு சென்றார்.

இதுகுறித்து கருணாநிதி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் செம்போடை கடை தெருவில் சந்தேகப்படும்படி நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் மைதிலிடம் செயினை பறித்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் குறவகுளத்தை சேர்ந்த வேதையன் மகன் சவுந்தர்ராஜன் (35) என தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த 2 பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News