செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கைது

Published On 2018-05-04 16:48 GMT   |   Update On 2018-05-04 16:48 GMT
சீர்காழி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை கைது செய்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே திருவெண்காடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று மாலை நாங்கூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை நடத்திய போது அவர் ஆயுதத்தை பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. அப்போது இந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார்.

இதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மேலநாங்கூர் பகுதியை சேர்ந்த இலக்கியராஜ் (வயது 35). என்பதும், பிரபல ரவுடியான இவர் மீது திருவெண்காடு, சீர்காழி, பொறையார் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இலக்கிய ராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தாக்குதலில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News