செய்திகள்

திருப்பூரில் பலத்த மழை- வெள்ளத்தில் சிக்கி முதியவர் பலி

Published On 2018-05-04 09:00 GMT   |   Update On 2018-05-04 09:00 GMT
திருப்பூரில் பெய்த பலத்த மழைக்கு முதியவர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். அவரது உடல் ஓடை முடிவடையும் ஆற்றில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீட்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு திடீரென இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறை காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

இந்த மழைக்கு முதியவர் ஒருவர் பலியானார். திருப்பூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (60). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன் படுத்து இருந்தார்.

இவரது வீட்டின் அருகே ஓடை செல்கிறது. பலத்த மழை காரணமாக திடீரென ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கருப்பண்ணன் அடித்து செல்லப்பட்டார். அவர் தன்னை காப்பாற்றும் படி சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் கருப்பண்ணனை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஓடையில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அவரது உடல் ஓடை முடிவடையும் ஆற்றில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீட்கப்பட்டது. இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளிவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

திருப்பூர் - 90.2

நீலகிரி மாவட்டம் ஊட்டி,கோத்தகிரி, நடுவட்டம், அவிலாஞ்சி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முதுமலை, கூடலூர் பகுதிகளில் வறட்சி நீங்கி பசுமையாக காணப்படுகிறது.

வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர், உணவுகள் இருப்பதால் அவைகள் இட பெயர்ச்சி அடைவது குறைந்து உள்ளது.

கோவையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் மழைக்கு மரங்கள் முறிந்து விழுந்தது. அதனை அதிகாரிகள் உடனடியாக அப்பறப்படுத்தினார்கள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. வால்பாறையில் லேசான மழை நீடித்தது.#tamilnews
Tags:    

Similar News