செய்திகள்

கடலூரில் சம்பளம் வழங்கக்கோரி துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்

Published On 2018-05-03 17:35 GMT   |   Update On 2018-05-03 17:35 GMT
கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:

கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனம் சார்பாக ஊதியம் கேட்டு மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுநாள் வரை சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் இன்று வேலையை புறக்கணித்தனர்.

அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் எதிரே ஒன்று திரண்டனர். பின்னர் பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News