செய்திகள்

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மேல்முறையீடு

Published On 2018-05-03 15:43 GMT   |   Update On 2018-05-03 15:43 GMT
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதற்கு எதிராக நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். #NaliniChidambaram
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். மூத்த வக்கீலான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார். இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அவரது மனு கோரிக்கை ஏற்கப்படவில்லை. புதிய சம்மன் அனுப்ப தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் புதிய சம்மன் கடந்த மாதம் அனுப்பியது.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். #NaliniChidambaram
Tags:    

Similar News