செய்திகள்

பணம் எடுக்க உதவுவது போல் ஏ.டி.எம். கார்டை பெற்று பெண்ணிடம் மோசடி

Published On 2018-05-03 12:43 GMT   |   Update On 2018-05-03 12:43 GMT
திண்டுக்கல் அருகே பணம் எடுக்க உதவுவதுபோல் பெண்ணிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கொழிஞ்சிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி கலைச்செல்வி. இவர் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். குடும்பத்தேவைக்காக கடன் பெற்றிருந்தார்.

ரூ.18 ஆயிரம் இவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை எடுப்பதற்காக தனது கணவருடன் சாணார் பட்டி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு வந்தார். அப்போது ஒரு வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து ஏ.டி.எம் கார்டை பெற்றுள்ளார். சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை எனக்கூறி கார்டை திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் அது கலைச்செல்வியின் ஏ.டி.எம்.கார்டு இல்லை என்பதை அறிந்து வாலிபரை தேடியுள்ளனர். ஆனால் அங்கிருந்து வாலிபர் மாயமாகினார். சிறிது நேரத்தில் ரூ.18 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக கலைச்செல்வியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்குபதிவு செய்து நூதனமுறையில் மோசடி செய்த மர்மநபர் குறித்து கண்காணிப்பு காமிரா மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News