செய்திகள்

சேலம் அருகே காய்ச்சல் பாதித்த 4 வயது சிறுவன் பலி

Published On 2018-05-03 11:33 GMT   |   Update On 2018-05-03 11:33 GMT
சேலம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மேச்சேரி:

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி குப்பகவுண்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் அபு (4).

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அபுவுக்கு நேற்று மேச்சேரியில் செல்வக்குமார் என்பவர் நடத்தி வரும் கிளீனிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் படி கூறி அவர் அனுப்பி வைத்தார். உடனே அவர்கள் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுது புரண்டனர். மேலும் சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் தனது மகன் இறந்து விட்டதாக டாக்டர் செல்வக்குமாரிடம் அவரது பெற்றோர் முறையிட்டனர்.

சரியாக சிகிச்சை அளிக்காததால் தனது மகன் இறந்து விட்டதாக மேச்சேரி போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் கூறி உள்ளனர். இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News