செய்திகள்

மாதவரம் - சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் திட்டம் 2045-ல் முடிவடையும்

Published On 2018-05-03 09:09 GMT   |   Update On 2018-05-03 09:09 GMT
மாதவரம்-சிறுசேரி இடையேயான மெட்ரோ ரெயில் திட்டம் 2045-ல் முடிவடையும். 32 லட்சம் பேர் இதில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #MetroTrain
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தற்போது நடந்து வருகிறது.

பயணிகள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.85,047 கோடி செலவிடப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களும் 107 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதில் 116 ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் 2045-ம் ஆண்டுக்குள் நிறைவேறும். 80 புதிய ரெயில்கள் விடப்படுகின்றன. 32 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவரம்-சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் சேவையில் ஐ.டி. துறையினர் பெரிதும் பயன் பெறுவார்கள். இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது-

மாதவரம்-சிறுசேரி 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது. 3 வழித்தடங்களில் 107 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. இதில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நிறைவு பெற்றதும் 32 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
Tags:    

Similar News