செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்- நிர்மலா சீதாராமன்

Published On 2018-05-03 10:42 IST   |   Update On 2018-05-03 10:42:00 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #MeenakshiAmmanTemple #BJP #NirmalaSitharaman
மதுரை:

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சுற்றுலா மாளிகை சென்ற அவர் அந்த வழியாக வந்த அழகர்கோவில் நோக்கி சென்ற கள்ளழகரையும் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மீனாட்சியையும், கள்ளழகரையும் தரிசித்தது மனதுக்கு நிறைவாக உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து பகுதிகளை நேரடியாக பார்த்தேன். கோவிலின் பழைய பொலிவை திருப்பிக் கொண்டு வரவேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசிடமும், மாவட்ட கலெக்டரிடமும் பேசியுள்ளேன். அரசு கோரிக்கை வைத்தால் மத்திய அரசு சீரமைப்பு பணிகளை செய்ய உதவும்.


மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலம். இதனை பொலிவுடன் வைத்துக் கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

நாடு முழுவதும் கிராம ஸ்வராஜ் திட்டத்தின்கீழ் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 69 கிராமங்கள் இந்த திட்டத்தின்கீழ் பலன் பெற்று உள்ளன. இதுவரை 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கிராம ஸ்வராஜ் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1467 கிராமங்கள் பயன் அடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேட்கும்போது, அதுபற்றி கவலையில்லை. அது எதிர்க்கட்சியினர் வேலை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #Madurai #BJP #NirmalaSitharaman

Similar News