செய்திகள்

அப்பல்லோவில் ஜெ.வை பார்த்த அமைச்சர் யார்? விசாரணை ஆணையத்தில் சிவக்குமார் தகவல்

Published On 2018-05-02 18:01 IST   |   Update On 2018-05-02 18:01:00 IST
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை அருகிலிருந்து பார்த்த ஒரே அமைச்சர் நிலோபர் கபில் என டாக்டர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். #JayalalithaaDeathProbe #InquiryCommission
சென்னை:

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பணியாற்றியவர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட பலதரப்பினரிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

சசிகலாவின் உறவினரான இவர் தான் போயஸ் கார்டனில் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து வந்தார். அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதனை ஏற்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு டாக்டர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2-வது முறையாக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு இன்று டாக்டர் சிவக்குமார் மீண்டும் ஆஜரானார். சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரான அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின் போது, ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டுமே தினந்தோறும் மருத்துவமனையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்தபோது அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்ணாடி வழியாகவே பார்த்தார், ஆளுநரை ஜெயலலிதா பார்க்கவில்லை.

அமைச்சர் நிலோபர் கபில் மட்டுமே ஜெயலலிதாவை மிக நெருக்கமாக பார்த்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் ஜெயலலிதா என விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்தார். #JayalalithaaDeathProbe #InquiryCommission 

Similar News