செய்திகள்

கோத்தகிரி அருகே குடும்ப தகராறில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர் கைது

Published On 2018-05-01 13:07 GMT   |   Update On 2018-05-01 13:07 GMT
கோத்தகிரி அருகே குடும்ப தகராறில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கிளப் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சுசித்ரா (27). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் 1 மகன் உள்ளார்.

சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சுசித்ரா கணவரிடம் கோபித்துக்கொண்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார். திடீரென தான் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் சுசித்ராவின் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடினார்.

இதில் படுகாயம் அடைந்த சுசித்ரா ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடிய மணிகண்டனை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுசித்ராவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மனைவியை தாக்கிய மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News