செய்திகள்

மாணவர்கள் மரங்கள் வளர்த்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-05-01 04:56 GMT   |   Update On 2018-05-01 04:56 GMT
பள்ளியின் ஆண்டு முடிவில் 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
ஈரோடு:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டி பாளையம் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இயற்கை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழாக்களை நடத்தி வருகிறோம்.

அதன்படி பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டு பேணிக்காத்து வளர்க்க வேண்டும்.

பள்ளியின் ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மிக விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு முழுவதும் 9 கல்லூரிகளில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 3145 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News