செய்திகள்

தமிழகம்- புதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2018-04-28 11:39 GMT   |   Update On 2018-04-28 11:39 GMT
காவிரி விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை பிரதமர் புறக்கணிப்பதாக கோவை விமான நிலையத்தில் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #Congress #Narayanasamy #Modi
கோவை:

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி 6 சதவிகிதமாக தற்போது குறைந்துள்ளது.

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற எடியூரப்பாவிற்கு பா.ஜ.க. தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது

பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை கிழிப்பது போன்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வரும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும்.

கர்நாடகவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளபோதிலும், புதுச்சேரி மக்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து நான் குரல் கொடுத்து வருகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க கேட்டு வருகிறோம்.


காவிரி விவகாரத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை பிரதமர் புறக்கணிக்கிறார். வஞ்சிக்கிறார்.

புதுவை ஆளுநரை திரும்பப்பெற கோரி கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். வளர்ச்சிக்காக ஆளுநர் கிரண்பேடி எதுவும் செய்யவில்லை. முதல்வரான பிறகு நிர்வாகம், கல்வி, சட்டம் - ஒழுங்கு போன்ற பல்வேறு துறைகளில் முதன்மையான இடத்தை ஆளுநரின் தொல்லை மீறி பெற்று வருகிறோம். அதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது.

பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆதிக்க செலுத்த மோடி நினைக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் 140 டாலர் என கச்சா எண்ணை விலை இருந்தபோது பெட்ரோல் ரூ.65 , டீசல் ரூ.55 என விற்பனை இருந்தது. ஆனால் தற்போது 65 டாலர் என கச்சா எண்ணை விலை இருந்தும், பெட்ரோல் ரூ.77, டீசல் ரூ.68 என விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயு, மண்ணெண்ணை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களை ரத்து செய்து நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியை மோடி செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy #Modi
Tags:    

Similar News