குத்தாலம் அருகே செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்(45). விவசாயி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி ஆரோக்கியதாசின் திருமணத்திற்காக தனக்கு சொந்தமான நிலத்தை வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வின்சென்ட் தனது நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு பலமுறை கேட்டும் ஆரோக்கியதாஸ் மீட்டு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் போலீசில் வின்சென்ட் புகார் செய்தார். ஆனால் இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட் இன்று காலை எலந்தங்குடியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி அறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன், பெரம்பூர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று வின்சென்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.