செய்திகள்

நாகையில் கோவில் சுவர் இடித்து அகற்றம்- பா.ஜனதாவினர் சாலை மறியல்

Published On 2018-04-15 16:30 GMT   |   Update On 2018-04-15 16:30 GMT
நாகையில் கோவில் சுவர் இடித்து அகற்றப்பட்டதால் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூர்:

நாகை சொக்க நாதர் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ரோட்டு ஓரத்தில் ஒரு விநாயகர் கோவில் கட்டி வழிப்பட்டு வருகின்றனர். இக்கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தநிலையில் ரோட்டு ஓரம் உள்ள விநாயகர் கோவிலில் காம்பவுண்டு சுவர் அமைத்துள்ளனர். இதுபற்றி புகார் எழுந்ததால் நாகை தாசில்தார் ராகவன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் சென்று விநாயகர் கோவில் காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் ஏராளமானோர் நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை வெளிப்பாளையம் போலீசார் சம்பவம் இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

Tags:    

Similar News