செய்திகள்

நெய்வேலியில் ரவுடி வெட்டிக்கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்

Published On 2018-04-10 08:59 GMT   |   Update On 2018-04-10 08:59 GMT
நெய்வேலியில் நள்ளிரவில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி தாண்டவன் குப்பம் எஸ்-பிளாக் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 26). ரவுடி.

இவர் மீது நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு சசிகுமார் அவரது வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் 5 பேர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்பட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர்.

அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த சசிகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த சசிகுமாரின் நண்பர் வேல்முருகன் அங்கு ஓடி வந்தார். அவர் வருவதை பார்த்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டது. பின்னர் சசிகுமாரின் அருகே சென்று வேல்முருகன் பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் சசிகுமார் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வேல்முருகன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக சசிகுமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

நள்ளிரவில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News