ஆதம்பாக்கத்தில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொது மக்கள் மறியல்
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர், ஜீவன் நகர், பார்த்தசாரதி நகர், ராம கிருஷ்ணாபுரம், நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் தில்லை கங்கா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
நள்ளிரவு 12 மணி வரை மின் இணைப்பு கொடுக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தில்லை கங்காநகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதம்பாக்கம் போலீசார் விரைந்து வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
எனினும் மின் இணைப்பு இன்று அதிகாலை வரை வழங்கப்படவில்லை. காலை 6 மணிக்கு பின்னரே ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு சீரானது. இரவு முழுவதும் மின்சாரம் வழங்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.