பெண்ணாடம் அருகே பெண் அடித்துக்கொலை
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கணபதிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 75). இவரது மனைவி ராசாத்தி (67). இவர்களது மகன் தேவேந்திரன் (40).
ராஜமாணிக்கத்தின் உறவினர் ராமசாமி (62). இவரது மகன் பச்சையப்பன் (25). இவர் விருத்தாசலத்தில் மளிகை கடையில் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜாமாணிக்கத்துக்கும், ராமசாமிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று மாலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
நேற்று இரவு ராஜ மாணிக்கம், அவரது மனைவி ராசாத்தி, மகன் தேவேந்திரன், அவரது மனைவி தேவி (35), மகள் தேஷா (16) ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது ராமசாமியின் மகன் பச்சையப்பன் திடீரென்று ராஜமாணிக்கத்தின் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த அனைவரையும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் ராஜமாணிக்கம், ராஜாத்தி, தேவேந்திரன், தேவி, தேஷா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். வீடு முழுவதும் ரத்தக்கரையாக காணப்பட்டது.
பின்னர் பச்சையப்பன் ஆத்திரம் அடைந்து ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்த 5 பேரும் கூச்சல் போட்டு அலறினர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டுக்குள் படுகாயம் அடைந்து கிடந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் ராசாத்தி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பச்சையப்பனை வலைவீசி தேடிவருகின்றனர்.
விருத்தாசலம் அருகே பெண்ணை அடித்து கொன்று வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.