செய்திகள்

நெய்வேலியில் ஏரியில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2018-03-31 15:30 IST   |   Update On 2018-03-31 15:30:00 IST
நெய்வேலியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 4-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் மணிகண்டன் (வயது 22).

இவர் பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நெய்வேலியில் உள்ள வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள மணிகண்டன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை மணிகண்டன் தனது நண்பர்கள் சிலருடன் நெய்வேலி அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள சாம்பல் ஏரிக்கு குளிக்க சென்றார்.

மணிகண்டன் மட்டும் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் ஏரி கரையில் அமர்ந்திருந்தனர். ஏரியில் ஆழமான பகுதிக்கு மணிகண்டன் சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அவர் தத்தளித்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

இதை பார்த்த நண்பர்கள் அலறியடித்து தண்ணீருக்குள் இறங்கி மணி கண்டனை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் நெய்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News