செய்திகள்

மத்தூர் அருகே பெண் தபால் ஊழியர் அடித்துக் கொலை- கள்ளக்காதலன் வெறிச்செயல்

Published On 2018-03-25 22:33 IST   |   Update On 2018-03-25 22:33:00 IST
மத்தூர் அருகே வாய் தகராறில் பெண் தபால் ஊழியரை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடரஹள்ளி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் விஜயலட்சுமி (வயது 42).

இவரது கணவர் சிவலிங்கம் (50) மத்தூர் ஆதி திராவிடர் நல விடுதியில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயலட்சுமிக்கும், மாடர ஹள்ளி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி(45)க்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வீட்டில் வைத்து வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கட்டையால் விஜயலட்சுமியின் தலை பகுதியில் ஓங்கி அடித்தார்.

இதில் அவரது தலை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் தன்னை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கிருஷ்ணமூர்த்தியிடம் கெஞ்சினார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி அவரை காப்பாற்ற மறுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

வலியால் அலறி துடித்த விஜயலட்சுமியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உறவினர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமியை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் விஜயலட்சுமியின் உடலில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் உறவினர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு வந்து தாயின் உடலை பார்த்து அம்மா.. அம்மா என கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மனைவி இறந்தது குறித்து கணவர் சிவலிங்கம் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வி‌ஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த மத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ண மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.

Similar News