ஸ்ரீமுஷ்ணம் அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வடக்கு பாளையாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வின்சென்ட் (வயது 37) . இவர் சம்பவதன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள தேவாலாயத்துக்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த டி.வி., டி.வி.டி. பிளேயர், லேப்-டாப், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தேவாலயத்துக்கு சென்ற ராபர்ட் வின்சென்ட் சிறிது நேரத்தில் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து ராபர்ட் வின்சென்ட் சோழதரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரியஜோசப் ஆரோக்கியதாஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சோழதரம் அருகே உள்ள மா.மங்களம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டார்.
உடனே போலீசார் வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர் மா.காடு வெட்டி பகுதியை சேர்ந்த சேகர் (வயது 32) என்பதும், அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவருடன் செல்வமணி (34) என்பவரும் சேர்ந்து ராபர்ட் வின்சென்ட் வீட்டில்பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சேகர், செல்வமணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிசென்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர். #tamilnews