செய்திகள்

காட்டுத்தீயில் பலியான விவேக் திருமணமாகி 6 மாதமே ஆன புது மாப்பிள்ளை

Published On 2018-03-12 11:09 IST   |   Update On 2018-03-12 11:09:00 IST
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியான ஈரோட்டைச் சேர்ந்த விவேக்கிற்கு திருமணமாகி 6 மாதமே ஆன தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TheniFire
ஈரோடு:

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 39 பேர் சிக்கினர்.

மலை ஏறும் குழுவினரான இவர்களில் சென்னை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் கருகி பலியாகி விட்டனர்.

இந்த தீ விபத்தால் பலியான விவேக் (வயது 25) புது மாப்பிள்ளை ஆவார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி வீதியைச்சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் திவ்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது.

பலியான விவேக் என்ஜீனியர் ஆவார். இவரது தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னொரு மகனும் உள்ளார். அவர் பெங்களூரில் பணிபுரிகிறார்.


மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு மனைவியுடன் புதுமாப்பிள்ளை விவேக் சென்றிருந்தார். அங்கு பிடித்த காட்டுத்தீயில் விவேக் கடுமையாக சிக்கி கொண்டு உயிரை இழந்தார். மனைவி திவ்யா தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

தீ விபத்தில் விவேக் கருகி பலியான சம்பவம் கிடைத்ததும் கவுந்தப்பாடியில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இன்று காலை அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர்.

மேலும் இந்த தீ விபத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (25), கண்ணன் (26), சென்னிமலை பிரபு (30) செந்தில் குமார், இவரது மனைவி கவிதா (35), மகள் நேகா (9) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Tamilnews

Similar News