செய்திகள்

தலைமை செயலகத்தில் படுத்து தூங்கும் போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு

Published On 2018-02-25 17:03 IST   |   Update On 2018-02-25 17:03:00 IST
இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகை வழங்காவிட்டால் தலைமை செயலகத்தில் படுத்து தூங்கும் போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #tnSecretariat

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்திரிபுலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 100 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 16 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கத்திரிபுலத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். வேதாரண்யம் கத்திரிபுலம் விவசாயிகள் 69-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இன்னும் 15 நாட்களுக்குள் பயிர் காப்பீடு தொகையை வேதாரண்யம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை தலைமை செயலகத்தில் படுத்து தூங்கும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #tnSecretariat ##ayyakannu

Similar News