அந்தியூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள நகலூர், பெருமாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக சின்னத் தம்பி பாளையத்தை சேர்ந்த தவகுரு என்பவர் உள்ளார்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமையும், பவுர்ணமி தினத்திலும் பூஜை நடைபெறும்.
மற்ற நாட்களில் மக்கள் வழிபாடு செய்ய கோவில் திறந்திருக்கும். ஆனால் கருவறை கதவு மூடப்பட்டு இருக்கும். பக்தர்கள் கருவறைக்கு வெளியே நின்று வழிபாடு செய்வார்கள்.
அதேபோல நேற்று மாலை வழிபாடு செய்ய காயத்ரி என்ற பெண் சென்றார். அப்போது கோவில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அவர் பார்த்தார்.
இது தொடர்பாக தகவல் அந்த பகுதியில் பரவியது. கோவில் தர்ம கர்த்தா அர்த்தநாரிக்கும் இது பற்றி தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்த பார்த்தார்.
பின்னர் இது தொடர்பாக அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சோதனையிட்ட போது கோவில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கருவறை கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அங்கு ஒன்றும் சிக்க வில்லை. உண்டியல் பணத்தை மட்டும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின்போதுதான் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த முறை திறந்து எண்ணப்பட்டபோது ரூ. 50 ஆயிரம் இருந்ததாம்.
அந்த வகையில் பார்க்கும்போது தற்போது உண்டியலில் ரூ. 20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்தியூர் போலீ சார் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.