செய்திகள்

அந்தியூர் வனப்பகுதியில் 2 ஆண் யானைகள் கடும் மோதல் - ஒரு யானை பலி

Published On 2018-02-07 16:36 IST   |   Update On 2018-02-07 16:36:00 IST
அந்தியூர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்டதில் வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டி ஒரு யானை பரிதாபமாக இறந்தது.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் மலையில் பெஜலட்டி என்ற வன கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தையொட்டி ஒரு பள்ளம் உள்ளது. அதில் 2 ஆண் காட்டு யானைகள் ஆக்ரோ‌ஷமாக மோதி கொண்டன.

ஒன்றோடு ஒன்று வளர்ந்த கூரிய தந்தங்களால் மோதின. 2 யானைகளின் பிளிறல் சத்தம் பெஜலட்டி கிராமத்திலும் எதிரொலித்தது. இதனால் கிராம மக்கள் திரண்டனர்.

இதில் சிலர் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்ற போது 2 யானைகளும் கடும் ஆக்ரோ‌ஷமாக சண்டை போட்டு கொண்டிருந்தது.

இதில் தந்தம் குத்தி ஒரு யானையின் வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த யானை அடுத்த நிமிடம் சாய்ந்து விழுந்த பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து கிராமமக்கள் பர்கூர் வனத்துறையிருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினரும் விரைந்து வந்தனர். அங்கு ஒரு யானை இறந்து கிடந்ததை கண்டனர்.

அப்போது இருட்டி விட்டதால் திரும்பி சென்றுவிட்டனர். இந்த யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு வனப்பகுதியிலேயே யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு இரையாக போடப்பட்டது.

Similar News