செய்திகள்

கவுந்தப்பாடி அருகே வயிற்றில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில் குத்தி தொழிலாளி பலி

Published On 2018-02-01 17:20 IST   |   Update On 2018-02-01 17:20:00 IST
கவுந்தப்பாடி அருகே விபத்தில் வயிற்றில் மறைத்து கொண்டு வரப்பட்ட மது பாட்டில் குத்தியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் மதுரைவீரன் காலனியை சேர்ந்த தொழிலாளி மயில்சாமி (வயது 51). மதுகுடிக்கும் பழக்கம் கொண்டவர்.

இவர் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில் மதுகுடித்து விட்டுமேலும் ஒரு மது பாட்டில் வாங்கினார். அந்த பாட்டிலை யாருக்கும் தெரியாமல் சட்டை உள்ளே வயிற்றுப் பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே பெத்தாக் கவுண்டர் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மயில்சாமி மீது மொபட் நேருக்கு நேர் மோதியது. இதில் அவரது வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில் உடைந்து அவரது வயிற்றில் குத்தி கிழித்தது. வயிற்றிலிருந்து ரத்தம் சொட்டச்... சொட்ட ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News