செய்திகள்

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி

Published On 2018-01-29 17:11 GMT   |   Update On 2018-01-29 17:11 GMT
ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. கூலிதொழிலாளி. இவர்களது மகன் பூபதி (வயது21).

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார். பூபதி வீட்டில் வறுமை காரணமாக படித்து கொண்டே, அவ்வப்போது கல்லூரி விடுமுறை நாட்களில் வேலைக்கும் சென்று வந்தார்.

திருமணம் போன்ற விஷேசங்களுக்கு கேட்டரிங் வேலை செய்வாராம். இந்நிலையில் கடந்த 26-ந்தேதி கேட்டரிங் வேலைக்காக பூபதி நண்பர்களுடன் சேர்ந்து மதுரைக்கு ரெயிலில் சென்றுள்ளார்.

பின்னர் பூபதி வேலை முடிந்து நேற்று இரவு தூத்துக்குடி- மைசூர் செல்லும் ரெயிலில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை 1 மணியளவில் ரெயில் சாவடிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பூபதி தூக்க கலக்கத்தில் எழுந்து ரெயிலின் வாசல் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் மற்றும் பயணிகள் உச்சலிட்டனர்.

ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஈரோடு ரெயில்வே சப்- இன்ஸ் பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு சாவடிபாளையம் தண்டவாளத்தில் இறந்து கிடந்த பூபதியின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பூபதியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News