செய்திகள்
நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகள் தர்சினி. பன்னீர் செல்வம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தர்சினி பூந்தோட்டம் அருகே உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை கலைவாணி தனது மகள் தர்சினியுடன் மோட்டார் சைக்கிளில் மகளுடன் சென்றார் அவர் முடிகொண்டான் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர் திடீரென கலைவாணி அணிந்திருந்த 6 1/2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
கொள்ளையன் செயினை பிடித்து இழுத்ததால் கலைவாணியும், தர்சினியும் கீழே விழுந்து காயமடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை தேடி வருகிறார்கள். #tamilnews