தொண்டாமுத்தூர் அருகே அரசு பஸ் மோதி மாடுபிடி வீரர் பலி
வடவள்ளி:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் நரசி பெருமாள் (வயது 24). மாடு பிடி வீரர். இவர் கோவை தொண்டா முத்தூரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று இவர் செட்டிப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிப்பதற்காக தனது நண்பரான செந்தில்குமார் என்பவருடன் சென்றார்.
பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை நரசி பெருமாள் ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிள் கெம்மனூர் ரோட்டில் சென்ற போது முன்னால் சென்ற அரசு பஸ்சை நரசி பெருமாள் முந்த முயன்றார். அப்போது பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து 2 பேரும் உயிருக்கு போராடினர்.
இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நரசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தொண்டா முத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.