விருகம்பாக்கத்தில் பெண்ணிடம் ரூ. 12 ஆயிரம் பறித்த வாலிபர் கைது
போரூர்:
விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆனந்தஜோதியின் கைப்பையை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
அதில் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது. இது குறிந்து ஆனந்தஜோதி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
நடேசன் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர்கள் ஆழ்வார்திருநகர் பாரதி நகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பர் தக்காளி என்கிற பிரபாகர் என்பது தெரியவந்தது.
இதைடுத்து கமலக் கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ. 2 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான பிரபாகரை போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்ட கமலக்கண்ணன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.