செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மாயமான கூலி தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு
ஆயாகுளம் ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கள்ளாத்தூரை சேர்ந்தவர் ரவி (வயது 50) கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி.. ரவிக்கு குடிபழக்கம் உண்டு. இவர் கடந்த 17-ந் தேதி காலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் போதையில் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் இன்று காலை கள்ளாத்தூர் அருகே உள்ள ஆயாகுளம் ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. உடனே ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏரியில் பிணமாக மிதந்தது ரவி என்பது தெரியவந்தது. குடி போதையில் ரவி தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews