செய்திகள்

முதலியார்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.75 லட்சம் மோசடி: கணவன் - மனைவி தலைமறைவு

Published On 2017-12-28 10:15 GMT   |   Update On 2017-12-28 10:15 GMT
ஏலச்சீட்டு பணம் ரூ.75 லட்சம் மோசடி செய்த தம்பதி குறித்து 30-க்கும் மேற்பட்டோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சண்முகம். இவர் தமிழக அரசின் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி (வயது 55). இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

தொடக்கத்தில் ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்கு சீட்டு பணத்தை முழுவதையும் ராணி கொடுத்து வந்தார். இதனை நம்பி அந்த பகுதியை சேர்ந்த பலரும் இவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தனர். நாளடைவில் சீட்டு ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை தராமல் ராணி காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகமும், அவரது மனைவி ராணியும் திடீரென மாயமானார்கள். உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என ஏலத்தில் சேர்ந்தவர்கள் நினைத்தனர். ஆனால் பல நாட்களாகியும் அவர்கள் வரவில்லை. இதன்பின்பு தான் கணவன் - மனைவி இருவரும் ரூ.75 லட்சம் சீட்டு பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஏலச்சீட்டு கட்டி பணத்தை இழந்த முதலியார்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த ராஜி (56) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சீட்டு பணம் மோசடி செய்து தலைமறைவான கணவன்-மனைவியை தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News