செய்திகள்

கிறிஸ்துமஸ் திருநாள்: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Published On 2017-12-25 09:10 IST   |   Update On 2017-12-25 09:10:00 IST
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மக்கள் இதயங்களில் அன்பை விதைத்து, அகிலம் முழுவதும் அன்புப் பயிர் செழித்து வளர, தன்னையே இந்த உலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் ஏசுபிரான் அவதரித்த திருநாளையே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். அன்பு ஒன்றையே அடித்தளமாக அமைத்து, தனது சகமனிதனை நேசிக்க வேண்டும் என்று போதித்து, இந்த உலகத்தில் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரவச் செய்து, வறுமையில் வாடுபவர்கள், ஏழை, எளியோர், நோயுற்றோர் நலம் பெற பரமபிதாவின் ஆசியுடன் அற்புதங்கள் நிகழ்த்தியவர் ஏசு பிரான். மன்னிக்கும் மனப்போக்கும், மனிதநேயமும் வளர்ந்தோங்கிட தன் வாழ்க்கையையே செய்தியாக தந்தவர் ஏசு பிரான்.

ஏசுநாதர் காட்டிய வழியில், மனமாச்சர்யங்களை விட்டொழித்து, சமாதானமும், சகோதரத்துவமும் எங்கும் பரவச் செய்திடுவோம். கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News