செய்திகள்

தண்டவாளத்தில் விழுந்த மரம்: நாகர்கோவிலில் ரெயில் சேவை கடும் பாதிப்பு

Published On 2017-11-30 10:04 GMT   |   Update On 2017-11-30 10:04 GMT
நாகர்கோவிலில், தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் ரெயில் சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளன.
நாகர்கோவில்:

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் தினசரி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக சந்திப்பு ரெயில் நிலையத்தில் மழை நீர் அதிகளவு தேங்கி உள்ளது. பல இடங்களில் தண்டவாளத்தை மூழ்கடித்த நிலையில் உள்ளதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து திரவனந்தபுரம் செல்லும் பாசஞ்சர் ரெயில் இன்று காலை இயங்கவில்லை. இதனால் இந்த ரெயிலை நம்பி கேரளாவிற்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

இதேபோல நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

கன்னியாகுமரி-நாகர்கோவில் ரெயில் பாதையில் வடக்கு தாமரைகுளம் அருகே ஒரு மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கன்னியாகுமரி- மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியா குமரி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News