செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண் பிரியா.

காதல் கணவருடன் சேர்ந்து வாழ போராடும் மாற்றுத்திறனாளி பெண்

Published On 2017-11-22 16:18 IST   |   Update On 2017-11-22 16:19:00 IST
ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் கணவருடன் சேர்ந்து வைக்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு, வைராபாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). மாற்றுத்திறனாளி பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன்(33) என்பவரை ஒரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குணசேகரன் அங்குள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். மூன்று மாதம் கணவன்-மனைவியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் திடீரென ஒரு நாள் குணசேகரனை அவர்களது பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் குணசேகரன் பிரியாவை சந்திப்பதை தவிர்த்து வந்தாராம். இது குறித்து கடந்த 6 மாதத்திற்கு முன் பிரியா தனது கணவர் குணசேகரனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று எஸ்.பி.அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

மேலும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரியா புகார் அளித்தார். ஆனால் மகளிர் போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் இன்று வா நாளை வா என்று தன்னை அலைக்கழிப்பதாக பிரியா வேதனையுடன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் எங்கு கிடைக்கும்? என அந்த மாற்றுத்திறனாளி பெண் தவித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணான பிரியா ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

ஒரு வருடத்துக்கு முன்பே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். 3 மாதம் என்னுடன் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தினார். மகிழ்ச்சியுடன் வாழ்ந்தோம்.

ஒரு நாள் என் கணவரது அம்மா-அப்பா வந்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு சென்று விட்டனர். என் கணவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அவரது பெற்றோர்தான் போனில் பேசினர்.

“உன்னுடன் அவன் வாழ மாட்டான். அவனுடன் சேர்ந்து நீ எப்படி வாழ்கிறாய்.. என்பதை பார்ப்போம்?” என்று கூறி எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இவ்வாறு பிரியா கூறினார்.

Similar News