செய்திகள்

ஈரோட்டில் ஜவுளிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-11-22 16:07 IST   |   Update On 2017-11-22 16:08:00 IST
ஹேர்-டை அலர்ஜியால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

ஈரோடு அண்ணாமலை நகர், வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜா (வயது 65). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு நவீன்குமார் என்ற மகனும், ஹரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

நடராஜா ஈரோட்டில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வந்தார். நடராஜா தனது தலைக்கு ஹேர்-டை அடிப்பது வழக்கம். அதே போன்று சமீபத்தில் ஹேர்-டை அடித்துள்ளார்.

இதனால் நடராஜனுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் அவர் சிகிச்சை பெற்றார். எனினும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடராஜா மனவேதனையில் இருந்து வந்தார். அவரது மனைவி பரமேஸ்வரி ஆறுதல் கூறி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடராஜா தூக்குபோட்டு கொண்டார். வெளியே சென்ற பரமேஸ்வரி திரும்பி வீட்டுக்கு வந்த போது கணவர் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நடராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் நடராஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News