செய்திகள்

ஈரோடு சம்பத்நகரில் வக்கீல் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு

Published On 2017-11-18 16:55 IST   |   Update On 2017-11-18 16:55:00 IST
ஈரோடு சம்பத்நகரில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த வக்கீல் மனைவியிடம் 7 பவுன் நகையை ஹெல்மெட் அணிந்த வாலிபர் பறித்து சென்றார்.
ஈரோடு:

ஈரோடு டீச்சர்ஸ் காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் வாசு. வக்கீலாக பணிபுரிகிறார். இவரது மனைவி அமிர்த கவுரி (வயது68). இவர்களது மருமகள் ரமணி. தினந்தோறும் காலையில் சம்பத்நகர் பகுதியில் அமிர்தகவுரி நடை பயிற்சி சென்று வருவாராம். வழக்கம் போல இன்று காலை 5 மணியளவில் அமிர்த கவுரியும், ரமணியும் சம்பத்நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது நடை பயிற்சி சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்களை நோட்டமிட்டபடி ஒரு வாலிபர் பின்தொடர்ந்துள்ளார்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வேகமாக வந்து அமிர்தகவுரியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க தாலி செயினை பிடித்து இழுத்துள்ளான். செயினை மீட்க அமிர்தகவுரி போராடினார். திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

ஆனால் அதிகாலை நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் அந்த வாலிபர் செயினை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் சென்று விட்டான்.

இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு வக்கீல் வாசு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு இன்ஸ் பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

போலீசார் வழக்குபதிவு செய்து அமிர்தகவுரியிடமும், ரமணியிடமும் விசாரணை நடத்தினர். ‘மெட்ரோ’ பட பாணியில் நகை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News