செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2017-11-13 12:11 GMT   |   Update On 2017-11-13 12:11 GMT
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊரில் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் என எதுவும் வருவதில்லையாம்.

அந்த ஊரில் உள்ள “போர்” பழுதாகிவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்களாம். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் நல்லூர் பஸ் நிறுத்தத்தில் குவிந்தனர். அங்கு சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் நடந்தரோடு முக்கியசாலை என்பதால் அப்பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரோட்டின் இரு புறமும் பஸ், கார், லாரிகள் என வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனும் வந்தார். அவர்கள் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர். சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News