செய்திகள்

ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் துணிகர நகை பறிப்பு

Published On 2017-11-10 18:54 IST   |   Update On 2017-11-10 18:54:00 IST
ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகையை பறித்து தப்பி ஓடிய கொள்ளையனை பயணிகள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஈரோடு:

கேரள மாநிலம் கள்ளிகோட்டை மாந்தாவில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி சஜிதா (வயது36).

சஜிதா நேற்று முன்தினம் இரவு மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் தனது மகளுடன் பயணம் செய்தார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது யாரோ மர்ம ஆசாமி ஒருவர் சஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினான்.

சஜிதா திடுக்கிட்டு விழித்து திருடன்..திருடன்..என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பெட்டியில் பயணம் செய்தவர்கள் அந்த மர்ம ஆசாமியை பிடித்தனர்.

அதற்குள் அந்த எக்ஸ் பிரஸ் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் அந்த கொள்ளையனை ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தேவதானத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பது தெரிய வந்தது. அவனிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அருண் பாண்டியன் மீது சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுப்பட்டதாக ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளது.

இதையடுத்து அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.

Similar News